மேஷம்

சமாதானத்தையும், அமைதியையும் விரும்புவர்களே, கடினமான முட்பாதைகளையும், மலர் பாதங்களாக மாற்றும் சக்தி கொண்டவர்களே,  உறுதியான அறிவும் தீரமிக்கசெயலின் வீரமும் காட்டுகின்ற, எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷராசி நேயர்களே,
     இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதிசாரமாக உங்கள் ஜன்ம ராசியில் இருந்து பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், உங்களின் தேகத்தைப் பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கக் தொடங்கும். மனதை ஒரு முகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள்.
     பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள் கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். புதியவர்களின் நட்பு ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும்.
  புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைப்பட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பரிகாரம்
   அறுபடை முருகன் கோவில்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். உடல்ஊனமுற்றவருக்கு வஸ்த்திர தானம் ,அன்னதானம் செய்யவும்.